ஹைட்ரோ கார்பன் திட்டம் வரவே வராது: சொந்த தொகுதியில் விஜயபாஸ்கர் வாக்குறுதி!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு நிச்சயம் எதிர்க்கும் என்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
நெடுவாசலில ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உறுதி அளித்திருந்தன.
இந்த நிலையில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போடப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து நெடுவாசல் மக்கள் தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டார். சோதனைக்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திட்டமிட்டபடி வருகின்ற 17 ஆம் தேதி மருத்துவ கவுன்சில் நடைபெறும் என்று கூறினார். மருத்துவ மாணவர் இடவொதுக்கீட்டில் எந்த ஒரு சர்ச்சையும் இல்லை என்றும் மாணவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவோம் என்றார்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றார். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மக்களுக்கு ஆதரவாகத்தான் உள்ளது என்று கூறினார்.
நெடுவாசல் மக்கள் வரும் 15 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் சந்திக்க விருப்பப்பட்டால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
அதேபோல் விவசாயிகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.