velmurugan warning about protests against govt

கும்பகோணம் அருகே கதிரா மங்கலத்தில், கச்சா எண்ணெய் கிணறுகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை கண்டித்து, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், சமூக அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையி பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜெயராமன் உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஜெயராமன் மீது, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கதிராமங்கலம் கிராம மக்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மக்கள் மீதுள்ள அடக்கு முறை, ஒடுக்கு முறையை காவல்துறை கைவிட வேண்டும். பொதுமக்கள் மீது போலீசார் நடத்தும் தாக்குதல்களை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு போராட்டங்களை தமிழக அரசு சந்திக்கும்.

ஏற்கனவே தலைமை செயலாகம், பாஜக தலைமை அலுவலகம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடு, கவர்னர் மாளிகை ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தையும் அவர்கள் அறிவார்கள்.

கதிராமங்கலம் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரை உடனடியாக அங்கிருந்து அப்பறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.