பாம்பன் பாலத்தில் அந்தரத்தில் தொங்கிய வேன் “ஜஸ்ட் மிஸ்சில்” - 15 பேர் தப்பினர்
ராமேசுவரம், பாம்பன் பாலத்தில் இன்று அதிகாலை சுற்றுலாப் பயணிகளுடன் வந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளாகி தடுப்புச்சுவரை உடைத்து, அந்தரத்தில் தொங்கியது. தீயணைப்பு துறையினர், போலீசார் விரைந்துவந்து மீட்டதில் 15 பேர் கடலில் விழாமல் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம், கல்லூரணியைச் சேர்ந்த 12 பேர் வேனில் இன்று அதிகாலை ராமேசுவரத்துக்கு சுற்றுலா புறப்பட்டனர். வேனை அழகேசுவரன் (வயது 32) என்பவர் ஓட்டிச் சென்றார். காலை 5.30 மணியளவில் பாம்பன் பாலத்தில் வேன் சென்ற போது, லேசாக மழை தூறிக்கொண்டு இருந்தது. அப்போது, டிரைவர் வேனை மெதுவாக ஓட்டியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எதிர்பாராத விதமாக வேன் அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பாலத்தின் இடதுபுறத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிய வேன், வலதுபுறம் நோக்கி பாய்ந்து, பாலத்தின் தடுப்புச்சுவரை இடித்தது. இதனால், வேனின் முன் பக்க சக்கரங்கள் பாலத்தின் வெளியே தொங்கியபடி நின்றது. வேனில் இருந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கூக்குரல் எழுப்பினர்.தகவல் கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை போலீசார் விரைந்து வந்து பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
இன்னும் ஒரு அடி வேன் முன்னேறிச் சென்றிருந்தாலும் கடலுக்குள் கவிழ்ந்து பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆனால், வேனின் முன்பக்க சக்கரம் மட்டும் பாலத்தின் வெளிப்புறம் தொங்கியபடி நின்று விட்டதால் 12 சுற்றுலா பயணிகளும் உயிர் தப்பினர். விபத்து குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் பாலத்தில் ஒரு பஸ் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு கடலுக்குள் விழுந்து 15 பேர் பலியானார்கள். அதன் பிறகு ஒரு டேங்கர் லாரி கவிழ்ந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.