ஐஏஎஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற பிரதாப் முருகன் - வைகோ நேரில் பாராட்டு
ஐஏஎஸ் தேர்வில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த பிரதாப் முருகன் தமிழ்நாட்டில் முதலிடமும், அகில இந்தியாவில் 21 ஆவது இடமும் பெற்றதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.
பிரதாப் முருகன் வத்திராயிருப்பிலும் பின்னர் பாளையங்கோட்டையிலும் பள்ளிப் படிப்பை முடித்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் வேதியியல் பொறியாளர் பட்டம் பெற்றார். தொடர்ந்து டெல்லியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி கல்விக் கூடத்தில் பயின்று, தேர்வில் கலந்துகொண்ட முதல் முறையிலேயே சிறப்பான வெற்றி பெற்று தமிழ்நாட்டில் முதல் இடத்துக்கு வந்துள்ளார்.
இதையடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ , 22 வயதில் இந்த சாதனை நிகழ்த்தி உள்ள பிரதாப் முருகனை அவரது வீட்டுக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது தமிழகத்தின் எதிர்கால நலனுக்கும், நேர்மையான நிர்வாகத்திற்கும் தன்னை அர்ப்பணிப்பேன் என்று பிரதாப் முருகன் வைகோவிடம் உறுதி அளித்தார்.
ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து முனைப்புடன் கல்வி பயின்று உயர்ந்த வெற்றியைப் பெற்றுள்ள இளைஞரான நீங்கள் நிர்வாகத்துறையில் உன்னதமான இடத்தை அடைந்து பெருமைக்குரிய சேவை செய்ய வாழ்த்துகிறேன் என்று வைகோ அவருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.