புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்க கோரி தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் இது தொடர்பாக விளக்கம் அளித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று
இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றாக ஹஜ் பயணமும் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் ஆண்டு தோறும் இந்தியாவில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக சென்னை, கொச்சி, ஐதராபாத் உள்ளிட்ட 21 இடங்கள் புறப்பாட்டு தலங்களாக செயல்பட்டு வந்தன. கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக ஹஜ் பயணம் புறப்பாட்டு தலம் 21லிருந்து 10 ஆக குறைத்து இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. 34 ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் ஹஜ் பயணத்திற்கான புறப்பாட்டு தலமாக இருந்து வந்தது. 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பயணிகள் ஆண்டுதோறும் சென்னையில் இருந்து புனித பயணம் மேற்கொண்டு வந்தனர் இந்தநிலையில் சென்னை புறப்பாட்டு தலம் மாற்றப்பட்டதால் ஹஜ் பயணம் செய்யும் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டனர்,

முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் கடிதம்
இதனால் சென்னையை மீண்டும் ஹஜ் பயணத்திற்கான புறப்பாட்டு தலங்களாக சேர்க்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு பல முறை கடிதம் எழுதியுள்ளார். இந்தநிலையில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஹஜ் பயணம் மேற்கொள்ள 2022 ஆம் ஆண்டு சென்னையை மையமாக அமைக்க வேண்டும் என கோரிக்கை கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஹஜ் 2022 க்கான ஏற்பாடுகள் சிறப்பு விதிமுறைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள், தகுதி அளவுகோல்கள் போன்றவற்றுடன் சிறப்பு சூழ்நிலையில் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஹஜ் 2022 க்கான வழிகாட்டுதங்கள் இந்திய ஹஜ் கமிட்டியால் வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் 2023 ஆம் ஆண்டு முதல் ஹஜ் பயணத்திற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்ல பரிசீலனை செய்யப்படும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் ஹஜ் மையமாக சென்னை
மத்திய அமைச்சரின் கடிதத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து டுவிட்டர் பதிவிட்டுள்ளார், அதில் 2023 ஆம் ஆண்டு சென்னையை புறப்பாட்டு இடமாக அறிவிக்க பரிசீலனை செய்யப்படும் என்ற தகவலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் சென்னை புறப்பாட்டு தலத்தை மாற்ற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
