நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை மூட திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார். 15க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடி, அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இது விளிம்புநிலை மக்களின் கல்விக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடுவதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டி உள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நீலகிரி மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை மாவட்ட கல்வி அலுவலர் சேகரித்துள்ளதாகவும் அதன்படி 85-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூடும் மார்ச் மாதத்திற்குள் நடவடிக்கையை திமுக அரசு எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

குன்னூர் வட்டாரத்தில் 19 அரசு தொடக்க பள்ளிகள், கூடலூர் வட்டாரத்தில் 18 அரசு தொடக்க பள்ளிகள் கோத்தகிரி வட்டாரத்தில் 18 தொடக்க பள்ளிகள் ஊட்டி வட்டாரத்தில் 35 தொடக்க பள்ளிகள் என மொத்தம் 85 பள்ளிகளை மூடுவதற்கான பட்டியலை திமுக அரசு தயார் செய்துள்ளது. 

15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் விதமாக அந்த மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
சம்மந்தப்பட்ட பள்ளிகளின் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அரசு பள்ளிகளை மூடவும், அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கவும் பெற்றோர் ஆசிரியர் தலைமையாசிரியர்களுக்கு திமுக அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் விளிம்பு நிலை மக்களின் கல்வி, குழந்தைகளின் அடிப்படை உரிமை தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அறிவாலயத்திலிருந்து செங்கல்லை உருவலாம் என நினைத்தால் இதுதான் நடக்கும்! முதல்வர் ஸ்டாலின்!

போக்குவரத்து வசதிகளற்ற மலை கிராமங்களிலும் வனங்கள் அடர்ந்த பகுதிகளிலும் அரசு பள்ளிகள் மட்டுமே மக்களின் ஒரே நம்பிக்கை. குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில், குறைவான எண்ணிக்கையில் மாணவ மாணவியர் அரசு பள்ளியில் சேருகின்றனர். எனவே மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால் பள்ளிகளை மூடுவதாக பள்ளிக்கல்வித்துறை கூறுவதை ஏற்க முடியாது. 

தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதாக அரசு அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. தரமற்ற வகையில் அரசு பள்ளிகளை மாற்றும் திமுக அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். போலி திராவிட மாடல் திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவழிக்காமல் மடைமாற்றம் செய்வதால் தமிழகத்தில் அரசு பள்ளிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. 

ஊழல், வெற்று விளம்பரம் செயலற்ற திறன், அரசியல் வன்மத்தில் ஊறி திளைத்து வரும் திமுக அரசு, அரசு பள்ளிகளை மூடும் வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறது. இதற்கு முன்னோட்டமாகவே நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு தொடக்க பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கையை திமுக அரசு தொடங்கி உள்ளது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று மாறிவிட்ட தமிழக அரசு நிர்வாகத்தால் ஏழை, எளிய, பட்டியலின மக்கள் தான் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

அதிமுகவிற்கு துரோகம் செய்யும் நிர்வாகிகள் யார்.? செங்கோட்டையன் வெளியிட்ட புதிய தகவல்

நீலகிரி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களின் கல்வி கனவை தகர்த்தெறியும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தமிழக முதல்வரை நான் கேட்டுக் கொள்கிறேன்.

வெற்று விளம்பர திட்டங்களை அறிவிப்பதிலேயே காலத்தை கடத்தி வரும் திமுக அரசு, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த என்ன செய்யப் போகிறது என்பதே தமிழக மக்களின் சார்பாக நான் முன் வைக்கும் கேள்வி. விளிம்பு நிலை மக்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை விளையாடும் விபரீதத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.. என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.