தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில், அடையாளம் தெரியாத 45 வயது பெண் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கம்மநாயக்கனள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சாலையோரத்தில் பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுதொடர்பாக உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தகவலின் பேரில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணின் அடையாளம், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்பதையும் அல்லது வேறு காரணமா என்பதையும் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் கழுத்தறுக்கப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.