Udhayanidhi Stalin Slams CM Vijay : பயிர்க்கடன் தள்ளுபடியில் TVK அரசு விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
Udhayanidhi Stalin Tweet against CM Vijay : தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு தொடர்பாக TVK அரசை செவ்வாய்க்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளார். கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து X தளத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "தேர்தல் பிரச்சாரத்தின்போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று TVK அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், இப்போது வெறும் 50,000 ரூபாய் வரையிலான கடன்களுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று அறிவித்திருக்கிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"TVK அரசு, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது," என்றும் அவர் கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் "நம்பிக்கைக்கு செய்த மாபெரும் துரோகம்" என்று குறிப்பிட்ட உதயநிதி, தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து அரசு பின்வாங்கிவிட்டதாக சாடியுள்ளார். முன்னதாக, 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்று நிபந்தனைகள் விதித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதல்வர் மீது உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் அரசு ஒரு "ஊழலை" அரங்கேற்றுவதாகவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். "முதல்வர் அவர்களே, இதுபோல இன்னும் பல துரோகங்களுக்கு மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டுமா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். "இது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி. நம்பிக்கைக்கு செய்த மாபெரும் துரோகம். முன்பு, 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் கிடையாது என்று ஷாக் கொடுத்தார்கள். இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஒரு ஊழலையே செய்கிறார்கள்," என உதயநிதி தனது பதிவில் கூறியுள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திங்கள்கிழமை அறிவித்திருந்தார். மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற பெரிய விவசாயிகளுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே உதயநிதியின் விமர்சனம் வந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நீட் ரத்து, பூரண மது விலக்கு, மாணவர் கடன் ரத்து, இன்னனும் பல சொன்னீங்களே என்ன ஆச்சு உங்கள் ஆட்சியில் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


