சென்னையில் நடைபெற்ற திமுகவின் 75வது அறிவுத் திருவிழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை 'கால், கார்' என விமர்சித்தார். அதிமுக தொண்டர்களை எடப்பாடி ஏமாற்றுவதாகவும், பாஜக ஒரு பாசிச கட்சி என்றும் அவர் கடுமையாக சாடினார்.

சென்னையில் நடைபெற்ற திமுகவின் 75வது அறிவுத் திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையில் கூறியதாவது:

கழகத்தின் வெற்றிக் கோட்டம்

திமுகவை வீழ்த்த நினைப்பவர்களின் திட்டம் தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது என்பதை உணர்த்தும் இடம் வள்ளுவர் கோட்டம் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், "இது வெறும் வள்ளுவர் கோட்டம் அல்ல; கழகத்தின் வெற்றிக் கோட்டம்" என்று முழங்கினார்.

கூட்டம் கூடுவது குறித்துப் பேசிய அவர், "ஊரில் தாஜ்மஹால், ஐஃபிள் டவர் போன்ற செட் போட்டு கண்காட்சி (எக்ஸிபிஷன்) நடத்தினால் கூட்டம் கூடத்தான் செய்யும். ஆனால், அதெல்லாம் வெறும் அட்டை" என்று விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனம்

எடப்பாடி பழனிசாமியைப் பார்த்தால் இரண்டு விஷயங்கள் மட்டுமே நினைவுக்கு வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்: "ஒன்று கால்... இன்னொன்று கார்." (காலணி மற்றும் கார் ஆகியவற்றின் சுட்டலாக இருக்கலாம்).

மேலும், “கொள்கையற்ற ஒரு கூட்டமும், பாசிச கட்சியும் தமிழகத்தை குறி வைக்கிறது. கொள்கை நம்மை வழிநடத்துகிறது; எடப்பாடி பழனிசாமியை பயம் வழி நடத்துகிறது. திமுக நடத்துவது அறிவுத் திருவிழா; அதிமுக நடத்தினால் அது அடிமைத் திருவிழாவாகத்தான் இருக்கும். திராவிடம் என்று கேட்டாலே பாஜகவின் பாசிசம் பதறுகிறது. அனைத்து மாநிலங்களிலும் நிலைமை மாறுகிறது" என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

ஏமாற்றப்படும் அதிமுக தொண்டர்கள்

அதிமுக தொண்டர்கள் மீது தனக்கு பரிதாபம் இருப்பதாகக் கூறிய உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டினார்.

"இருபது நாட்களுக்கு முன்பு ஒரு பிரம்மாண்டமான கட்சி நம் கூட்டணிக்கு வரும் என்றார். பிறகு அவருடைய பிரச்சாரத்தில் இன்னொரு கட்சியின் கொடியைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள். உடனே, 'பார்த்தீர்களா, பிள்ளையார் சுழி போட்டாச்சு' என்று சொன்னார். அவரைப் பார்க்கும்போது, பரீட்சைக்கு முந்திய நாள் வரை படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தவிட்டு, மறுநாள் தேர்வு எழுதச் சென்ற மாணவன் போல இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்று கிண்டலாக விமர்சித்தார்.