'ரமணா' பட பாணியில் மத்திய அரசு ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்

மத்திய பாஜக ஆட்சியில் சில திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய தணிக்கைக்குழு (சிஏஜி) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக இந்திய தலைமை கணக்காயர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 99999 99999 என்ற போலி செல்போன் எண்ணில் 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெற்ற நோயாளிகள் 88 ஆயிரத்து 760 பேர் இறந்துவிட்டனர். ஆனால் அவர்கள் இறந்த பிறகும் சிகிச்சையளிக்கப்பட்டதாக கூறி, 2 லட்சத்து 923 காப்பீட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'ரமணா' பட பாணியில் மத்திய அரசு ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். திமுக இளைஞரணியின் மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெறவிருக்கிறது.

மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர் கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், சேலம் மாநாட்டை திமுக வரலாற்றில் இடம்பெற வைக்க, முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் திமுக இளைனஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் ஒரு மாநாடு நடைபெற்றது. மாநாடு எப்படியெல்லாம் நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக நடந்தது. மாநாடு நடத்தியவர்களுக்கு ஏன் அந்த மாநாடு நடைபெற்றது என்றே தெரியவில்லை என அதிமுக மதுரை மாநாட்டை விமர்சித்தார்.

கொள்கைகள், கருத்துகள் ஏதுமின்றி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை அதிமுக மாநாட்டில் நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், தமிழ்நாடு முழுக்க மாணவர்களுக்காக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தியது திமுக என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மதக் கலவரங்களை ஏற்படுத்தி, நாட்டை இரண்டாக்கும் பாஜக..! மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவு அறிவிப்பு- ஸ்டாலின்

இந்தியா முழுக்க நீட் தேர்வு அமலானபோதும், தமிழகத்தில் நுழைய விடாது செய்தவர் கலைஞர். ஜெயலலிதா மறைவுக்கு பின் பாஜகவை திருப்திபடுத்த, தமிழகத்தில் நீட்டை அனுமதித்தது எடப்பாடி பழனிசாமி அரசு எனவும் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக விமர்சித்தார்.

சி.ஏ.ஜி அறிக்கைக்கு பின் மத்திய அரசின் பல துறைகளில் நடைபெற்ற ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், 'ரமணா' பட பாணியில் இறந்து போன 88ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கியதாக கணக்கெழுதி ஊழல் செய்துள்ளது மத்திய அரசு. 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பலனடைந்த ஒரே குடும்பம் அதானியின் குடும்பம் மட்டுமே என சாடினார்.

இனி வரக்கூடிய காலங்களில், யாருக்கும் சால்வை போன்றவைகளை அணிவிக்காமல் புத்தகங்களை வழங்குங்கள். விளம்பர பதாகைகள் வைக்காதீர்கள். பட்டாசு வெடிக்காதீர்கள் எனவும் புதுக்கோட்டை மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். மேலும், நாட்டை பாசிச சக்திகளிடம் இருந்து மீட்டெடுக்க களமிறங்கியிருக்கும் முதல்வர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த சேலத்தில் ஒன்று திரள்வோம் எனவும் அப்போது அவர் சூளுரைத்தார்.