மயிலாடுதுறையில் சாராய விற்பனையை எதிர்த்த இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தை அடுத்துள்ள முட்டம் கிராம சேர்ந்தவர் ஹரிஷ்(25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஹரிசக்தி(20) கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் முட்டம் வடக்குத்தெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சாராய விற்பனை செய்வதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முட்டம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சாராய வியாபாரி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் ராஜ்குமார் ஜாமீனில் வெளிவந்தும் மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களான ஹரிசக்தி, ஹரிஷ் ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகியோர் ஹரிசக்தி, ஹரிஷ் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து சாராய வியாபாரிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள், சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன் வீடுகளுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சாராய விற்பனையை போலீசாரிடம் போட்டுக் கொடுத்த இளைஞர்களை போட்டுத் தள்ளிய பயங்கரம்! பதற்றம்! போலீஸ் குவிப்பு!
இந்நிலையில் துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? என அண்ணாமலை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி காவல்துறைக்குத் தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?
துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது.
தமிழகம் தற்போது, 2006 - 2011 திமுகவின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
