Two teachers for school without even a single student
சிவகங்கை
சிவகங்கையிலுள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஒரு மாணவன் படிக்கத தொடக்கப் பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இங்கு மாணவர்களை சேர்க்கை யாரும் முன்வருவதில்லை.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. கடந்த 1989–ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில் கச்சநத்தம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வந்தனர்.
ஆனால், நாளடைவில் இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 20–க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை இருந்து வந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அதிகப்படுத்த எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் மாணவர் சேர்க்கை குறைந்து இந்த வருடம் தொடக்கத்தில் 11 மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வந்தனர்.
இதனிடையில் கச்சநத்தம் கிராம மக்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளியில் பயின்ற 11 மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியில் மாற்றுச்சான்றிதழை வாங்கிக்கொண்டு வேறு பள்ளியில் சேர்ந்துவிட்டனர்.
பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் கச்சநத்தம் தொடக்கப் பள்ளியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், இங்கு படித்தால் மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்" என்று கருதுகின்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள் அலட்சியம் காட்டிவருகின்றனர்.
மாணவ, மாணவிகள் யாருமே வராத நிலையில் இந்தப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் மட்டும் தினசரி வந்து பள்ளியை திறந்து வைத்து வெறுமனே உட்கார்ந்துவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்புகின்றனர்.
எனவே, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
