பாஜக பிரமுகரை வீடு புகுந்து தாக்கிய இருவர் கைது; ஏன் அடித்தார்கள்? போலீஸ் விசாரணை...
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் பாஜக பிரமுகரை வீடு புகுந்து சரமாரியாக தாக்கிய இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். அடித்ததற்கான காரணம் குறித்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவிலைச் சேர்ந்த பாஜக பிரமுகர் உலகநாதன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருநாகலிங்கம் மகன் சக்தி (58), அதே ஊரைச் சேர்ந்த கருப்பையா மகன் சசிவர்ணம் (50) ஆகிய இருவரும் உலகநாதனின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர். பின்னர், வீட்டில் இருந்த உலகநாதனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் உடன் இருந்தவர்கள் இதுகுறித்து காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து தாக்கியவர்களை தடுத்துள்ளனர்.
அப்போது விசாரிக்க வந்த சார்பு ஆய்வாளர் ஆறுமுகநாதனையும் சக்தி பணி செய்யவிடாமல் தடுத்தாராம். இதுகுறித்து நயினார்கோவில் காவல் நிலையத்தில் உலகநாதன் அளித்த புகாரின் பேரில் சக்தி, சசிவர்ணம் ஆகிய இருவர் மீதும் காவலாளார்கள் வழக்குப் பதிந்தனர்.
பின்னர் இதுதொடர்பாக சக்தி, சசிவர்ணத்தை காவலாளர்கள் கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.