தவெக தலைவர் விஜய் நாளை சேலம், கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், தவெக தொண்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அது குறித்து பார்ப்போம்.
தவெக தலைவர் விஜய், சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) சேலம் மற்றும் கரூரில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதையொட்டி தவெக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைமை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு: * நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம்.
மின்கம்பங்கள், சுவர்களில் ஏற வேண்டாம்
* மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்டு சுவர்கள், மரங்கள், மின்விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உயரமான இடங்களின் மேலே கண்டிப்பாக ஏறக் கூடாது.
ஆம்புலன்ஸ்க்கு இடையூறு கூடாது
* கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள். உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழலாம்.
* மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கும் பெண்கள். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.
போக்குவரத்துக்கு இடையூறு கூடாது
* காவம் துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டும்.
* போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்களைக் கண்டிப்பாக நிறுத்தக் கூடாது.
* நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் அனைவரும் பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.
சட்டம் ஒழுங்கை பேண வேண்டும்
* தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அல்லது அங்கே செல்லும் வழிகள் மற்றும் திரும்பி வரும் வழிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியந்துடன் நடந்துகொள்ள வேண்டும். கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
பேனர் வைக்கக் கூடாது
* தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை / இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட நம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.
* தலைவர் வருகை உள்ளிட்டவற்றின்போதும் கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* காவல் துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.
* நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில் யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் நிதானமாகக் கலைந்து செல்ல வேண்டும்.
