திமுகவை எதிர்க்கும் வலிமை எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் அமமுக இடம் பெறாத கூட்டணி ஆட்சி அமைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுகவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் எடுத்த முயற்சிகள் கை கூடுவதற்கு முன்பாகவே அவரை get out என்றதால் அவர் வேறொரு இயக்கத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் எங்களை சந்தித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

செங்கோட்டையன் என்னை சந்திக்கும் போது விஜய் கட்சியில் இணைவது பற்றி பேசவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறிய பின்பு சில கட்சிகள் நாங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என பேசினார்கள். அதுபற்றி நாங்கள் முடிவுக்கு வந்த பிறகு அறிவிக்கிறேன். தவெக கூட்டணிக்கு வர சொல்லி செங்கோட்டையன் அழைக்கவில்லை.

2021 தேர்தலில் அமித்ஷாவின் கூட்டணி முயற்சிகளை முறியடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. 2024ல் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடாது என நாடாளுமன்ற தேர்தலில் செயல்பட்டார். எங்களை வெளியேற்றிய பிறகு திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என பி டீமாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அதிமுகவில் இன்னும் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருப்பவர்கள் இருந்தால் இந்த இயக்கம் 2026 தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு தான் விழித்துக் கொள்வார்கள்.

விஜய் திரைத்துறையில் 30 ஆண்டுகளாக இருப்பவர். அவருடைய கூட்டங்களுக்கு இளைஞர்கள் ஆர்வத்தோடு அதிக அளவில் வருகிறார்கள். அதனால்தான் திமுகவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை விஜய் அமைத்தால் போட்டியிருக்கும் என்று சொன்னேன்.

திமுகவை எதிர்க்கும் வலிமையோடு எடப்பாடி பழனிச்சாமி இல்லை. இரட்டை இலை பலவீனமாகிவிட்டது. 2021 தேர்தலைப் போல் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவார். விஜய் தலைமையில் நல்ல கூட்டணி அமைந்தால் அவர் திமுகவிற்கு வலுவான போட்டியாக இருப்பார் என்று தான் சொல்கிறேன். அமுமுகவை தவிர்த்துவிட்டு யாரும் ஆட்சிக்கு வர முடியாது நாங்கள் இடம் பெறுகின்ற கூட்டணி தான் வரும் தேர்தலில் வெற்றி பெறும்" என்றார்.