காதலிக்க மறுத்த மாணவியை எரித்து கொல்ல முயற்சி! தப்பியோடிய வாலிபருக்கு வலைவீச்சு!
காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் 12 ஆம் வகுப்பு மாணவியை உயிரோடு எரிக்க முயன்ற சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே செஞ்சேரிபுதூரைச் சேர்ந்தவர் மாணவி ஒருவர். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு பயின்றி வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அந்த மாணவியிடம் தான் காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார், மாணவியை எரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர், பெட்ரோல் கேனுடன், மாணவியின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்.
மாணவியை பார்த்த செல்வகுமார், அருகில் சென்று மீண்டும் காதலிக்கும்படி கூறியுள்ளார். இதற்கு மாணவி மீண்டும் மறுப்பு தெரிவித்திருக்கிறார். மாணவியின் பேச்சால் கோபமடைந்த செல்வகுமார், கையில் வைத்திருந்த பெட்ரோலை மாணவியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
உடலில் தீ பற்றியதால், மாணவி அலறியுள்ளார். மாணவியின் அலறலைக் கேட்டோர், விரைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியைக் கொல்ல முயன்ற செல்வகுமார், சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய செல்வகுமாரை தேடி வருகின்றனர்.