ரூ.2 கோடியில் முக்கோண ஆன்மிக சுற்றுலாத்தலம்; மூன்று மத கோயில்களும் மேம்பட போகுது! எங்கே தெரியுமா?
திருநெல்வேலி
திருநெல்வேலியில் உள்ள இராதாபுரம் தாலுகாவில் ரூ.2 கோடியில் முக்கோண ஆன்மிக சுற்றுலாத்தல மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது என்று ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்..
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தாலுகா உவரி கப்பல் மாதா ஆலயம், ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்கா, விஜயாபதி விசுவாமித்திரர் ஆலயம் ஆகிய திருத்தலங்களை முக்கோண ஆன்மிக சுற்றுலாத்தலமாக மேம்படுத்துதல்
மற்றும் தெற்குகள்ளிகுளம் பனிமயமாதா ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்தல் ஆகிய பணிகள் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பணிகள் நடைபெறும் இடங்களை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "உவரி செல்வமாதா ஆலயம், திருவம்பலபுரம் ஆத்தங்கரை பள்ளிவாசல் ஷேக்முகமது செய்யது அலி பாத்திமா பள்ளிவாசல், விஜயாபதி விசுவாமித்திரர் ஆலயம் ஆகிய திருத்தலங்களை இணைத்து முக்கோண ஆன்மிக சுற்றுலாத்தலமாக மாற்றிட சுற்றுலாத்துறையின் மூலம் அடிப்படை வசதிகள் மேம்படுத்திடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்கா அருகில் ரூ.6 இலட்சம் மதிப்பில் பெண்கள் சுகாதார வளாகம், ரூ.10 இலட்சம் மதிப்பில் பயணிகள் காத்திருப்பு கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
உவரி கப்பல் மாதா ஆலயம் அருகில் ரூ.12½ இலட்சத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் சுகாதார வளாகம், ரூ.10 இலட்சத்தில் பயணிகள் காத்திருப்பு கூடம், ரூ.14 இலட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் வசதி செய்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது.
விஜயாபதி விசுவாமித்திரர் ஆலயம் அருகில், ரூ.12½ இலட்சத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் சுகாதார வளாகம், ரூ.13½ இலட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் வசதி செய்தல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
தெற்குகள்ளிகுளம் பஞ்சாயத்து அதிசய பனிமயமாதா ஆலயத்தில் ரூ.8 இலட்சத்தில் ஆண்கள் சுகாதார வளாகம், ரூ.8 இலட்சத்தில் பெண்கள் சுகாதார வளாகம், ரூ.12 இலட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து புதிய தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
மேலும், உவரி கப்பல் மாதா கோவில் முதல் அந்தோணியார் கோவில் வரை ரூ.39 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைத்தல், ரூ.31 இலட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் அதிசய பனிமயமாதா ஆலயத்தை சுற்றி தார்சாலை அமைத்தல், அதிசய பனிமயமாதா நகரில் ரூ.21 இலட்சத்தில் தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற பின்னர் இவை சிறந்த ஆன்மிக சுற்றுலாத்தலமாக மாறும்" என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, சேரன்மாதேவி உதவி ஆட்சியர் ஆகாஷ், சுற்றுலா அலுவலர் நெல்சன், இராதாபுரம் தாசில்தார் புகாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சினிவாச சுடலைமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.