சிறப்பு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுமா.? கிளாம்பாக்கமா.? விளக்கம் கொடுத்த போக்குவரத்து கழகம்
பொங்கல் திருநாளையொட்டி முன்பதிவு செய்தவர்களும், பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் விழுப்புரம். திருச்சி மதுரை மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க கோயம்பேட்டிற்கு வரவேண்டும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
![Transport Corporation clarification regarding Pongal bus operation from Koyambedu KAK Transport Corporation clarification regarding Pongal bus operation from Koyambedu KAK](https://static-ai.asianetnews.com/images/01hcnw7h8jknvmnv6v6f37c14x/koyambedu_363x203xt.jpg)
பொங்கல் கொண்டாட்டம்
பொங்கல் பண்டிகையையொட்டி தங்களது சொந்த ஊரில் உறவினர்களோடு உற்சாகமாக கொண்டாட மக்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக லட்சக்கணக்கனோர் ஒரே நேரத்தில் பேருந்து மற்றும் ரயில்களில் செல்வார்கள். இதனையடுத்து பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ளதால் பேருந்துகள் எங்கிருந்து பேருந்து ஏறுவது என குழப்பமான நிலை இருந்தது. இதனையடுத்து இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
30.12.2023-க்கு முன்பு முன்பதிவின் போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாக பயணிக்க முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் அதற்கு பதிலாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் சென்றடைந்து, அங்கு தாங்கள் கோயம்பேட்டில் முன்பதிவு செய்த அதே நேரத்தில் புறப்படும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம்
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களான விழுப்புரம். கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி பேருந்துகளில் (மூன்றுக்கு இரண்டு இருக்கை (3X2) கொண்டவை) பயணிக்க முன்பதிவு செய்தவர்களும், பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் விழுப்புரம். திருச்சி மதுரை மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க கோயம்பேட்டிற்கு வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 12/01/2024 முதல் 14/01/2024 வரை கிளாம்பாக்கத்திலிருந்து முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்.
NH45 தேசிய நெடுஞ்சாலை வழியாக கும்பகோணம் மார்க்கமாக இயங்கும் பேருந்துகளில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தும் (KCBT) அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) கழகத்தைச் சார்ந்த பேருந்துகள் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்தும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்கின்ற நாகப்பட்டினம், கும்பகோணம், திருத்துறைபூண்டி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் என்பதை தெரிவித்துக்கொள்வதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்