செய்த வேலைக்கு பணம் தராததால் டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டம்…
வேலூர்
வாலாஜாவில் உள்ள மணல் குவாரியில் வேலை வாங்கிவிட்டு அதற்கு உரிய பணம் தராததால் சினம் கொண்ட டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், வாலாஜாவை அடுத்த சாத்தம்பாக்கம் பாலாறு அணைக்கட்டுப் பகுதியில் மணல் குவாரி ஒன்று உள்ளது.
இந்த மணல் குவாரிக்கு சாத்தம்பாக்கம் மற்றும் சக்கரமல்லூர் பாலாற்றில் இருந்து டிராக்டர்கள் மூலம் மணல் எடுத்துவரப்படுகிறது. எடுத்து வரப்படும் மணல் பாலாறு அணைக்கட்டுப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டு பின்னர், அரசு விதிமுறைகளின்படி விற்கப்படுகிறது.
இந்த குவாரிக்கு மணல் எடுத்து வரும் டிராக்டர் உரிமையாளர்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் செய்த வேலைக்கு உரிய பணம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனராம்
டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் தாங்கள் செய்த பணிக்கு பலமுறை பணம் கேட்டும், அதற்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை என்பதால் சினம் கொண்ட டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் குறித்து தகவலறிந்த வாலாஜா காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.