முன்னாள் மாசுகட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை வழக்கில் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை ஆவணங்களை கேட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி புதிய தலைமை செயலக காலனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரியான வெங்கடாச்சலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெங்கடாச்சலம் ஓய்வுபெற இருந்த நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெங்கடாச்சலத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கணக்கில் காட்டப்படாத 13.5 லட்சம் பணம், 11 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 15.25 கிலோ எடைகொண்ட சந்தன மரக்கட்டைகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது சொத்துகுவிப்பு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெங்கடாச்சலம் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைச் சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது இரு செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இவ்வழக்கை கடந்த டிச.10 ஆம் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
ஏற்கனவே போலீசார் நடத்திய விசாரணையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது வெங்கடாச்சலத்தின் பணம் மற்றும் நகைகள் பறிபோனதால் குடும்பத்துக்குள் பிரச்சனை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்தது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கை சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி தலைமையில் டி.எஸ்.பி புருஷோத்தமன், காவல் ஆய்வாளர் சத்யன் உள்ளிட்ட சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.
முதற்கட்டமாக வேளச்சேரி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக நடத்தியுள்ள விசாரணை ஆவணங்களை அவர்களிடமிருந்து பெறவுள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக வெங்கடாச்சலத்தின் மனைவி, மகன், மகள், மற்றும் அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த வேலைக்காரப் பெண் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
