Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu doctors strike : ஸ்டிரைக்கை அறிவித்த மருத்துவர்கள்… நீட் கலந்தாய்வை விரைவாக நடத்த வலியுறுத்தல்!!

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை விரைவுப்படுத்தக்கோரி நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Tomorrow doctors strike in Stanley Hospital
Author
Chennai, First Published Nov 30, 2021, 3:44 PM IST

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை விரைவுப்படுத்தக்கோரி நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு பெறுவதற்கான வருவாய் உச்ச வரம்பு, ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எந்த அடிப்படையில் இந்த உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த், விக்ரம் நாத் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வருவாய் உச்ச வரம்பு நிர்ணயம் தொடர்பாக மறு ஆய்வு செய்ய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பதிலளிக்க நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும். அதுவரை முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒத்தி வைக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்தனர். இது மருத்துவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Tomorrow doctors strike in Stanley Hospital

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு மற்றும் சேர்க்கை நடைமுறைகளை விரைவாக நடத்தி முடிக்கும்படி மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்திடம், இந்திய டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் நாளை புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடபடவுள்ளதாக தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுக்குறித்து தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்றின் போது நாட்டின் மருத்துவர்கள் முன்னின்று போராடி வருகின்றனர். இதில் அதிக சுமை மற்றும் சோர்வுற்ற மருத்துவர்கள் தாமதமான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடர்பாக சில நேர்மறையான விளைவுகளுக்காக இன்று வரை பொறுமையாகக் காத்திருக்கின்றனர். 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மருத்துவ பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவர்கள் இல்லாமல் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், நீதிமன்ற விசாரணை ஜனவரி 6, 2022 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடர்ச்சியான தாமதங்களுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைக் குறிக்கும் வகையில் டாக்டர்கள் சங்க பிரதிநிதிகளே, (TNRDA) டிசம்பர் 1, 2021 (நாளை) புற நோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் சேவைகளை இடைநிறுத்தவும், அதே தேதியில் மதியம் 12- 2 மணி வரை நாட்டின் பிற மாநிலங்களுக்கு ஏற்ப ஆர்ப்பாட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளது.  

Tomorrow doctors strike in Stanley Hospital

மேலும் இதன் மூலம் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு மற்றும் சேர்க்கை செயல்முறையை விரைவுபடுத்துவதற்கும், அவசர அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவாகக் கண்காணிப்பதற்கும், மருத்துவர்களைக் கவனத்தில் கொள்ளவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் சேவைகளை முழுத் திறனுடன் மீண்டும் வழங்குவதற்கும், சுகாதாரத்தைப் பாதிக்கும் இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையைத் தீர்ப்பதற்கும் ஒரு நேர்மறையான விளைவை மருத்துவர்கள் எதிர்பார்ப்பதாகவும் இது சுகாதாரப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை நீக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகம் பணிபுரியும் மருத்துவர்களின் சுமையைக் குறைக்க வேண்டிய நேரம் இது என்றும் அங்குள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்குத் தடையின்றிச் சேவைகளை வழங்குவதற்கு தங்கள் திறனுக்கு அப்பாற்பட்டுச் செயல்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டு மருத்துவர்கள், அவர்களின் நீண்டகால உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஓய்வு இல்லை என்று தோன்றுவதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios