இன்று இந்தியா முழுவதும் சிவ ஆலயங்களில் சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை இந்த மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி திதியில் தான் இந்த சிவராத்திரி வரும். அந்த வகையில் 2022 மார்ச் 1ஆம் தேதியான இன்று மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சிவன் கோயில்களிலும் விழாவுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டமானது நடைபெறும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில் விழாக்களில் மிகவும் முக்கியமானது சிவாலய ஓட்டம். மகாசிவ ராத்திரி அன்று 12 சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பாகும்.
அதாவது 24 மணி நேரத்தில், சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவுக்குட்பட்ட பன்னிரென்டு சிவாலயப் பெருமான்களை தரிசிப்பது ஆகும். இந்தக் கோயில்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் தரிசிக்க வேண்டிய காலம் கருதியே இந்த ஓட்டமானது நடைபெறுகிறது.இவ்விழாவில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சிவ பக்தர்களும் வந்து சிவனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பதில் மார்ச் 12ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. ஏற்கெனவே அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4ஆம் தேதியும் குமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
