தென் மாவட்ட மக்களே ரெடியா இருங்க… இன்றும், நாளையும் கொட்டப் போகுது மழை !!
கன்னியாகுமரி அருகே மாவத்தீவு கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் செம மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்த வரை கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனது. சென்னை மற்றும் ஒரு சில மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்கில் கடும் வறட்சியே நிலவியது.
இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மதுரை, வேலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.
இதனிடையே கன்னியாகுமரி அருகே மாலத்தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாகவும், தமிழகத்தில் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றும் சந்திப்பதன் காரணமாகவும் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதாவது 2 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
.குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மற்றும் வட மாவட்டங்களான வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என அவர் கூறினார்.
எனவே, அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கன்னியாகுமரி, மாலத்தீவு பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும் பாலசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்..