TNEB staff strike : ஸ்டிரைக்கை அறிவித்த மின்வாரிய ஊழியர்கள்... மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு!!
மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் பேரணி மற்றும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் பேரணி மற்றும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். மத்திய அரசு, 2003 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான, உத்தேசித்திருக்கும் புதிய மின்சார சட்டத் திருத்தத்திற்கான வரைவு ஏற்கனவே கடந்த ஆண்டில் வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த முடிவு, தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் உள்ளதாகவும் மாநில அரசு நிறுவன செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாக தெரிகிறது என்றும் தெரிவித்தனர். இதற்கிடையே மின்சார சட்டத் திருத்த முன்வடிவினை திரும்பப் பெறுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இதுக்குறித்த அவரது கடிதத்தில், 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம், மாநில டிஸ்காம்களுக்கு ஏற்படும் தீங்கான தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, மின்சாரச் சட்டம், 2003-ல் கொண்டு வரப்படும் திருத்தங்களை ஒத்திவைக்க உங்கள் அவசரத் தலையீட்டைக் கோரி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்த திருத்த மசோதா, ‘விநியோக நிறுவனம் மற்றும் 60 நாட்களுக்கு விண்ணப்பித்த பிறகு, அத்தகைய விநியோக நிறுவனத்தை பதிவு செய்தல் என்ற கருத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், மின்சார விநியோகத் துறையை சீர்குலைக்க முன்மொழிகிறது என்று அறிகிறேன். இந்த நடவடிக்கையானது, தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடற்ற அணுகலை வழங்கும் மற்றும் பொதுத்துறை மின் நிறுவனங்களின் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள விநியோக வலையமைப்பைப் பயன்படுத்த அவர்களுக்கு உதவும். மாநில பொதுத்துறை நிறுவனம் இத்தகைய நெட்வொர்க்குகளில் முதலீட்டின் சுமையை சுமக்கும் போது, இந்த தனியார் நிறுவனங்கள் எந்த முதலீடும் அல்லது அதை பராமரிக்கும் பொறுப்பும் இல்லாமல் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.
கூடுதலாக, அத்தகைய புதிய தனியார் விநியோக நிறுவனங்கள் வணிக ரீதியாக சாத்தியமான பகுதிகளில் உள்ள அனைத்து உயர் மதிப்பு வாடிக்கையாளர்களையும் தேர்ந்தெடுத்து அணுக முடியும். இது எந்த சமூகக் கடமைகளும் இல்லாமல் எடுக்கும் லாபகரமான முயற்சிகளுக்கான உரிமையை அவர்களுக்கு வழங்குவதாகும், அதே சமயம் மாநில பொதுத்துறை மின்வாரியங்கள் மானிய விலையில் உள்ள நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவது மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய/கிராமப்புற பகுதிகளுக்கு சேவை செய்யும் கடமையுடன் உள்ளது. 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம், தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் இருப்பதோடு, மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் உள்ளதால், மின்சார சட்டத் திருத்த முன்வடிவினை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் ,பிப்ரவரி 1 ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், டிசம்பர் 15 ஆம் தேதி டெல்லியை நோக்கி பேரணியும், அதே நாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சேப்பாக்கத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.