தொழிலாளர்களுக்கான பதவி உயர்வு விரைந்து வழங்க வேண்டி டி.என்.சி.எஸ்.சி எம்ப்ளாயிஸ் யூனியன் ஆர்ப்பாட்டம்...
நாகப்பட்டினம்
தொழிலாளர்களுக்கான பதவி உயர்வு விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.என்.சி.எஸ்.சி எம்ப்ளாயிஸ் யூனியன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகை புதிய பேருந்து நிலையம் முன்பு டி.என்.சி.எஸ்.சி எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மண்டலத் தலைவர் பி. மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் கோ.சி.வள்ளுவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "தொழிலாளர்களுக்கான பதவி உயர்வு, பணப் பலன்களைக் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.
நவீன அரிசி ஆலைகளில் உள்ள காலிப் பணியிடங்களைப் பதவி உயர்வு அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும்.
கொள்முதல் ஊழியர்களின் மாத ஊதியம், ஊதிய நிலுவைத் தொகை, கருணைத் தொகை ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல நிர்வாகத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.