tn police shocked about karan sinha transfer
சென்னை போலீஸ் கமிஷனர் கரன் சின்கா அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். புதிய கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கமிஷனர் மாற்றப்பட்ட சம்பவம் சென்னை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் பணியாற்றி வந்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டபோது, பல்வேறு கட்சியினர் சட்டம் ஒழுங்கு சரியில்லை என தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து அவர் மாற்றப்பட்டு, கரன் சின்ஹா நியமிக்கப்பட்டார். ஆனால், தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டது.
தேர்தல் முடிந்த பிறகு ஜார்ஜ் மீண்டும் கமிஷனராக நியமிக்கப்படுவார் என்று எதிர் பார்த்தனர். ஆனால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டா அவர், கடந்த வாரம் அவர் தீயணைப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தொடர்ந்து சென்னை மாநகர கமிஷனராக கரன் சின்ஹா செயல்படுவார் என பேசப்பட்டது. கரன் சின்ஹா பதவியேற்ற நாள் முதல், போலீசாரின் பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளார். பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருந்த போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கினார்.
தினமும் பல்வேறு புகார்களும், குறைகளையும் மனுவாக கொண்டு வரும் பொதுமக்களை சந்தித்தார். அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தார். மேலும் மாலை நேரத்தில் கமிஷனர் அலுவலக வளாகத்திலேயே நடைபயிற்சி மேற்கொண்டார்.
அந்த நேரத்தில், அங்குள்ள போலீசாருடன், அன்னியோன்யமாக பேசி பழகினார். கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணிக்கு பெண் போலீசாரை நியமித்தார். அந்த பணியில் இதுவரை ஈடுபட்டு வந்த ஆண்களை நகரத்தின் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்த உத்தரவிட்டார்.
ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தினார். ரவுடிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தார். இதனால் குற்றங்கள் குறைந்தன. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் அதிரடியாக மாற்றப்பட்டு டம்மியான சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
