திமுக அமைச்சர் துரைமுருகன் அரசு பள்ளிகளை அவமானப்படுத்தி விட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர்களின் ஆணவம் அழிவைத் தரும் என்று நயினார் காட்டமாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்கள் அரசு பள்ளிகளிலும் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதற்கு மக்களின் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால் ஏதும் ஆகி விடாது என்ற தொனியில் அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அரசுப் பள்ளியை அவமானப்படுத்திய துரை முருகன்

இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் அரசு பள்ளிகளையும், மாணவர்களையும் அவமானப்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''திமுக அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற விளம்பர நாடகத்திற்காக அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகள் பறிக்கப்பட்டு, பிள்ளைகள் கொளுத்தும் வெயிலில் வெளியே அமர வைக்கப்படுவது குறித்து நாம் பல முறை கண்டித்துள்ளோம்.

ஒரு நாளில் பாடம் நடக்கப் போவதில்லை

இந்நிலையில் இதுகுறித்த பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு, “ஒரு நாளில் அப்படி ஒன்றும் பாடம் நடக்கப்போவதில்லை, ஒரு நாளில் பிள்ளைகளின் படிப்பிற்கு எந்த இடையூறும் வரப்போவதில்லை” எனக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும் மாணவர்களின் கற்றல் திறனையும் ஒருசேர அவமானப்படுத்தியுள்ளார் திமுக அமைச்சர் துரைமுருகன் அவர்கள்.

திமுக அரசுக்கு என்ன உரிமை?

ஆணவம் தெறிக்கும் திமுக அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. அரசுப்பள்ளிகள் ஒருநாள் செயல்படவில்லை எனில் ஒன்றும் குடிமுழுகிப் போகாது என்ற தொனியில் ஒரு அரசு அமைச்சர் பொதுவெளியில் பேசுகிறார் என்றால், ஏழை எளிய பிள்ளைகளின் கல்வியின் மீது திமுகவினருக்கு எத்தனை அலட்சியம் இருக்க வேண்டும்? எங்கள் பிள்ளைகளுக்கு ஒருநாள் கல்வி தேவையில்லை என முடிவு செய்வதற்குத் திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

கல்வியில் சிறந்த தமிழ்நாடு

ஒன்றுக்கும் உதவாத ஆளும் அரசின் விளம்பரங்களுக்காக அரசுப்பள்ளிகளை ஒருநாள் முடக்கும் திமுக அரசு, பலர் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு மணி நேரம் கூட விடுமுறை கொடுப்பதில்லையே ஏன்? இந்த டாஸ்மாக் மாடல் அரசுக்கு மது விற்பதைத் தவிர வேறு எதிலும் நாட்டமில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இந்த லட்சணத்தில் இவர்களுக்குக் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற விளம்பரம் வேறு'' என்று தெரிவித்துள்ளார்.

அண்னாமலையும் கண்டனம்

முன்னதாக, அமைச்சர் துரைமுருகனின் பேச்சு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்து இருந்தார். ''மீண்டும் மீண்டும் ஏன் உங்களுடன் ஸ்டாலின் முகாமை அரசு பள்ளிகளில் நடத்துகிறீர்கள். மக்கள் மீது அக்கறை இருந்தது என்றால் திமுக அலுவலகங்களில் நடத்துங்கள்'' என்று அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.