1-8ம் வகுப்புக்கு மேலும் ஒரு வாரம் விடுமுறை நீட்டிப்பா? பள்ளிக் கல்வித்துறை திட்டம் எனத் தகவல்!!
தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மேலும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மேலும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் வரை பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. ஆன்லைன் வகுப்புகளே நடத்தப்பட்டு வந்தன. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதை அடுத்து கடந்த நவம்பர் மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் தங்களை நேரடி வகுப்புகளுக்கு தயார்படுத்தி வந்த நிலையில், புதிய அச்சுறுத்தலாக ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதோடு கொரோனா மூன்றாவது அலையும் பரவத் தொடங்கியதால், நேரடி வகுப்புகளை தொடர்வதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து ஜனவரி 5 ஆம் தேதி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவிருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துமாறு உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இதனையடுத்து ஜனவரி 31 வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புக்ளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கட்டுப்பாடுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக இப்போது தான் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 30,000 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மேலும் ஒரு வாரம் விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறை முடியும் ஓரிரு நாட்களுக்கு முன்பாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.