கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு பின்னர் சற்று குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 35 ஆயிரம் பேருக்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக கொரோனா படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த வாரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 600 என்ற அளவுக்கு இருந்தது. இதனால், பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில், கொரோனா வைரஸ் உருமாறி ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகர பகுதிகளில் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு இன்று மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், தற்போது அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. மேலும், அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கலுக்கு ஜல்லிகட்டு போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டியில் பங்கேற்பவர்கள் மற்றும் பலர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்பவகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பன உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகள் மட்டும்தான் அனுமதிக்கப்படும் என அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த மாதம் மதுரை மாவட்டம், ஊமச்சிக்குளம் அடுத்த வீரபாண்டியில் கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்தாண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். கலப்பின மாடுகள் டோக்கன் கொடுக்க மாட்டோம். தி.மு.க ஆட்சியில் ஜல்லிக்கட்டு முறையாக நடத்த அனுமதி பெற்று தரப்பட்டது. நாட்டு மாடு இனங்களை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
