கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவுப் பேருந்தின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த இரண்டு கார்கள் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இன்று (புதன்கிழமை) இரவு நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், இரண்டு கார்களில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அரசு விரைவுப் பேருந்தின் டயர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் (SETC) பேருந்து ஒன்று இன்று இரவு புறப்பட்டுச் சென்றது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த எழுத்தூர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அதன் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
டயர் வெடித்த வேகத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை (Median) உடைத்துக்கொண்டு எதிர் திசையில் பாய்ந்தது.
அப்போது எதிர் திசையில் (சென்னையிலிருந்து திருச்சி நோக்கி) வந்த இரண்டு கார்கள் மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த கோர மோதலில், இரண்டு கார்களும் பேருந்தின் அடியில் சிக்கி அடையாளம் தெரியாத அளவுக்கு அப்பளம் போல் உருக்குலைந்தன.
பலியான குழந்தைகள்
கார்களில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திட்டக்குடி மற்றும் ராமநத்தம் போலீசார், பொதுமக்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் பெரம்பலூர் மற்றும் திட்டக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போலீசார் கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றிப் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கினார்களா? அல்லது வெவ்வேறு கார்களில் வந்தவர்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


