திருப்பதி கோயில் லட்டு தரமானதா? - உணவு பாதுகாப்பு தர ஆணையம் 4-வது முறையாக நோட்டீஸ்...
திருமலை திருப்பதி கோயிலின் லட்டு பிரசாதத்தின் தரம் குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு தர ஆணையம் கேள்வி எழுப்பி தேவஸ்தானத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நாடு முழுவதும் கோயில், மசூதி, தேவாலயம் என 28.4 லட்சம் சர்வமத வழிபாடு தலங்கள் உள்ளன. இங்கு வழங்கப்படும் பிரசாதங்கள், அன்னதானம் ஆகியவை பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் சார்பில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதம் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது? அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது. சுவை, லட்டு பிரசாதம் தயாரிக்கும் மூலப்பொருட்களின் தரம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதி தேவஸ்தானத்துக்கு இந்திய உணவுப்பாதுகாப்பு தர ஆணையம் சார்பில் நினைவூட்டல் கடிதம் எழுதப்பட்டது. 2-வது முறையாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதியும், அடுத்ததாக 30-ந்தேதியும் நினைவூட்டல் கடிதம் எழுதி தேவஸ்தானிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
ஆனால், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இதுவரை இந்திய உணவுப் பாதுகாப்பு தர ஆணையத்துக்கு எந்தவிதமான பதில் கடிதமும் அளிக்கவில்லை. இந்நிலையில், இந்த கடிதம் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி அனுப்பப்பட்டுள்ளது. 4-வது முறையாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், திருப்பதி தேவஸ்தானம் கூறுகையில், “ தங்களின் கட்டுப்பாட்டில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதம் சுத்தமான, சுகாதாரமான சூழலில் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது’’ என ஊடகங்களிடம் தெரிவித்து, இருந்தது குறிப்படத்தக்கது