சிவகங்கை மாவட்டம் சக்குடி அருகே போலீஸ் ரோந்து வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 வயது மகன் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி
மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரசாத் (25). இவரது மனைவி சத்யா (20). இவர்களுக்கு இரண்டு வயதில் அஸ்வந்த் என்ற மகன் இருந்தார். இவர்கள் அனைவரும் மதுரை அனஞ்சியூரில் அண்மையில் மரணமடைந்த உறவினர் தங்கம்மாள் இறுதி சடங்கிற்கு சென்று விட்டு மீண்டும் ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேர் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம் சக்குடி அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த காவல் துறையின் ரோந்து வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சோனேஸ்வரி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், சிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத் (25) என்பவர் தனது மனைவி சத்யா (20) மகன் செல்வன்.அஸ்வந்த் (3) மற்றும் அவரது உறவினர் சோனேஸ்வரி ஆகியோருடன் நேற்று இரவு சுமார் 7.20 மணியளவில் சிகவங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், அனஞ்சையூர் கிராமத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது மதுரையிலிருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற காவல்துறை வாகனமும் மேற்படி இருசக்கர வாகனமும் பூவந்தி -சக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலையில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பிரசாத் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அவரது மனைவி சத்யா மற்றும் மகன் அஸ்வந்த் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சோனேஸ்வரி என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
