தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வீட்டு வேலைக்காரர் விஷம் குடித்து இறப்பு; கொலையா? தற்கொலையா? தொடங்கியது விசாரணை…
ஈரோடு
தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வீட்டு வேலைக்காரர் தனது வீட்டில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். கொலையா? தற்கொலையா? என காவலாளர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (60). இவர் கடந்த 20 ஆண்டுகளாக பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வீட்டில் வேலைக்காரராக பணி செய்து வந்தார். இவருடைய மனைவி பாப்பாத்தி (57).
இவர்களுக்கு சந்திரன் (32), மாகாளி (30) என்ற இரண்டு மகன்களும், இலட்சுமி (28) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் வெங்கமேட்டில் உள்ள தனது வீட்டில் குப்புசாமி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்று நேற்று காலை குப்புசாமி இறந்தார்.
இதுகுறித்து பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம் வழக்குப்பதிந்து குப்புசாமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் விஷம் கொடுத்து கொன்றனரா? என்று தீவிரமாக விசாரித்து வருகிறார்.