போதிய நிலக்கரி கையிருப்பு.. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 5 அலகுகளிலும் மின் உற்பத்தி தொடக்கம்..
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 15 நாட்களுக்கு பிறகு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகளிலும் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் நாள்தோறும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு, கொதிகலன் பழுது காரணமாக அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகிலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. அனல் மின்நிலையத்தில் போதிய நிலக்கரி கையிருப்பு உள்ள நிலையில் திடீரென மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
அனால் இதற்கு அதிகாரிகள் தரப்பில், தமிழகத்தில் மதுரை மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள காற்றாலை மூலம் 3,600 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுவதால் துத்துக்குடி அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேவைக்கு ஏற்ப மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் 15 நாட்களுக்கு பின்னர் நேற்று இரவு முதல் 5 அலகுகளிலும் மீண்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 50 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும் மேலும் நிலக்கரி கொண்டுவரப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: உஷார்.. இன்று 10 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மிதமான மழை.. வானிலை அப்டேட்