தூத்துக்குடியில் மினி பேருந்துகள் வேலைநிறுத்தம்; மக்கள் பெரும் அவதி…
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மினி பேருந்துகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பல்வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் சென்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல 29 மினி பேருந்துகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி, பேருந்து நிலையத்தின் கிழக்கு, மேற்கு பகுதியில் மினி பேருந்துகள் சென்று, பயணிகளை ஏற்றி இறக்கிச் சென்றன.
இந்த நிலையில் மினி பேருந்துகள் அண்ணா பேருந்து நிலையத்திற்குச் சென்று, பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதால், அரசு பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறி, அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனையடுத்து அண்ணா பேருந்து நிலையத்தின் வடக்குப் பகுதியில் மினி பேருந்துகளை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லுமாறு நகரசபை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அங்கு மினி பேருந்துககளை நிறுத்தினால், மக்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு, விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது என்று கூறி, மினி பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோவில்பட்டியில் உள்ள அனைத்து மினி பேருந்துகளும், கோவில்பட்டி – கடலையூர் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள சாலையோரத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இதனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டியில் பல்வேறு பொருட்களை வாங்க முடியாமல் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.