This year Tigers number increased in vellimalai

தேனி

வெள்ளிமலை வனப்பகுதியில் நடந்த கணக்கெடுப்பில் புலிகளின் நடமாட்டம் போன வருடத்தைவிட இந்த வருடம் அதிகரித்துள்ளது என்று வனச்சரகர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், கடமலை–மயிலை ஒன்றியத்தில் பல 1000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதி கண்டமனூர், மேகமலை, வருசநாடு ஆகிய மூன்று வனச்சரகங்களாக பிரிக்கப்பட்டு வனத்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியை 'பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி'யாக அரசு அறிவித்தது. 

புலி, யானை, கரடி, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ள நிலையில் இந்த வனப்பகுதியில் கடந்த வாரம் புலி, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த பணியில் வனத்துறை அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் என எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு வனப்பகுதியில் கால்தடம், எச்சம், விலங்குகளின் ஒலி மற்றும் கண்ணால் பார்ப்பது ஆகியவற்றை வைத்து கணக்கெடுக்கும் பணிகள் நடந்தது. 

வனத்துறையினருடன் சேர்ந்து தன்னார்வலர்களும் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிடடத்தட்ட ஒருவாரம் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பு பணிகள் நேற்று முடிவடைந்தது.

இதுகுறித்து மேகமலை வனச்சரகர் குமரேசன், "தற்போதைய கணக்கெடுப்பின்படி வெள்ளிமலை வனச்சரக பகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது கண்டறியபட்டுள்ளது. 

வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட வனப்பகுதிகளில் புலிகளின் கால் தடங்கள் அதிகளவில் உள்ளது. தற்போது நடைபெற்ற கணக்கெடுப்பில் வனவிலங்குகள் எண்ணிக்கை குறித்து மாவட்ட வனஉயிரின காப்பாளருக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. தற்போது புலிகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்று அவர் கூறினார்.