” இதுக்காக தான் பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் பற்றி பேசி உள்ளார்.. ” ஸ்டாலின் உரையில் இதை கவனிச்சீங்களா?
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பிரதமர் மோடி கருதுகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திமுக நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது, திமுக குடும்ப அரசியல் செய்வதாக பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு ஸ்டாலின் பதிலளித்தார். திமுக குடும்ப அரசியல் நடத்துவது உண்மை தான் எனவும், ஆனால் திமுகவின் குடும்பம் என்பது தமிழ்நாடும், தமிழர்கள் தான் என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும் பிரதமர் மோடியின் அச்சத்தின் வெளிப்பாடே இந்த விமர்சனத்திற்கு காரணம் என்றும் அவர் கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர் “ கடந்த 23-ம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாட்னாவில் ஒரு கூட்டத்தை கூட்டினார்.
பாஜகவுக்கு எதிராக இருக்கக்கூடிய கட்சிகளை ஒன்றுதிரட்டி ஒரு தேர்தல் வியூகத்தை அமைக்க வேண்டும், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த வியூகத்தோடு சந்திக்க வேண்டும் என்பது பற்றி கலந்துபேசிட முதல் கூட்டமாக அந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள். அதன் பிறகு பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட அச்சம் தான், அவர் இறங்கி வந்து பேசும் சூழல் உருவாகி உள்ளது.
கனகசபை விவகாரம்.. திமுக இனிமேலும் இதை தொடர்ந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் : அண்ணாமலை எச்சரிக்கை
பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலம், கடந்த 50 நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது. 150 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இதுவரை பிரதமர் அந்த பக்கமே செல்லவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை கூட 50 நாட்களுக்கு பிறகே அமித்ஷா நடத்தி உள்ளார். இதுதான் மத்தியில் ஆளும் பாஜகவின் லட்சணம். இந்த லட்சணத்தில், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்போவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒரு நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும், மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பிரதமர் மோடி கருதுகிறார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சரியான பாடத்தை வழங்க மக்கள் தயாராகி விட்டனர். தமிழக மக்களும் தயாராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் ஆட்சி, தேர்தல் உறுதிமொழிகளை தொடர்ந்து நிறைவேற்றுகிறோம். எப்படி தமிழ்நாட்டில் ஒன்று சேர்ந்து நமது ஆட்சியை உருவாக்க காரணமாக இருந்தீர்களோ, அதே போல மத்தியில் ஒரு சிறப்பான மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்க தயாராக வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.