திருவண்ணாமலை கார்த்திகை தீபம் - 2,000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு, பக்தர்களின் வசதிக்காக 2000 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருவிழா வரும் டிசம்பர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து 9ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான அண்ணாமலையார் மலையில் மகா தீபம் 12ம் தேதி ஏற்றப்படுகிறது. பின் 13ம் தேதி பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.
சுமார் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இதனையடுத்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து 600 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. மேலும் சேலம், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, நாகை, புதுச்சேரி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து 2,000 சிறப்பு பஸ்கள் இயக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.