தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக தேவூர் ஊராட்சி தேர்வு - நாகை ஆட்சியர் அறிவிப்பு...
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவூர் கிராமம் தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்தச் செய்திக்குறிப்பில், "தீண்டாமை கடைப்பிடிக்காமல், மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமத்தை தேர்வு செய்து, அந்த கிராமத்துக்கு தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் ரூ.10 இலட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.
இந்தப் பரிசுத் தொகையைக் கொண்டு, அந்த கிராமத்தில் குடிநீர் வசதி, பாதை மேம்பாடு, பள்ளிக் கட்டடம் சீரமைப்பு, பள்ளிக் குழந்தைகள் நல மையம் அமைத்தல், புதிய தெருவிளக்குகள் அமைத்தல், கால்நடை தண்ணீர் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2017-18 -ஆம் ஆண்டின் தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக கீழ்வேளூர் வட்டம், தேவூர் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.