ரஜினியை விட தலைமை பண்பு, திறமை உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சாடல்...
கடலூர்
ரஜினியை விட தலைமை பண்புள்ளவர்கள், நிர்வாக திறமை உள்ளவர்களெல்லாம் நிறைய பேர் உள்ளனர் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
கடலூர் சிப்காட்டில் டான்பாக் நிர்வாக பணியாளர்கள் வாழ்வுரிமை சங்க கொடியேற்று விழா மற்றும் வாயிற்கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமைத் தாங்கி கொடியேற்றி வைத்தப் பேசினார்.
இந்த விழாவில் டான்பாக் சங்க கௌரவத் தலைவர் செந்தில், தலைவர் கார்த்திக், செயலாளர் செந்தில்ராஜ், பொருளாளர் பிரபாகரன், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பஞ்சமூர்த்தி, முடிவண்ணன், கடலூர் தொகுதி செயலாளர் ஆனந்த், நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணன், நகர செயலாளர் கமலநாதன், பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதன்பின்னர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், "‘ஒகி’ புயல் பாதிப்பை ஒரு மாதத்திற்கு பிறகு மத்தியக்குழு வந்து பார்வையிடுவது கண்டிக்கத்தக்கது.
‘ஒகி’ புயலில் இதுவரை 400-க்கும் அதிகமானவர்கள் காணாமல் போனதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத்தான் மீனவர்களும் கூறி வந்தனர். எனவே காணாமல் போன மீனவர்களை மீட்டுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காணாமல்போன மீனவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு நிவாரணம் வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காணாமல்போன அனைத்து மீனவர்களுக்கும், அரசு அறிவித்த 20 இலட்சம் ரூபாய் நிவாரணத்தையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் உடனே வழங்க வேண்டும்.
புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரிக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி உதவி போதாது, எனவே உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். அதேப்போல் புயலால் சேதமடைந்த படகுகளை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி கேட்கிறீர்கள், தமிழ்நாட்டை ஆள ரஜினி வந்து இருக்கிறார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அவரை விட தலைமை பண்புள்ளவர்கள், நிர்வாக திறமை உள்ளவர்களெல்லாம் நிறைய பேர் உள்ளனர்.
தமிழ்நாட்டை சினிமாத்துறையில் உள்ளவர்கள் ஆண்டது போதும். தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு ரஜினி ஏதாவது குரல் கொடுத்து இருக்கிறாரா? தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு அவர் குரல் கொடுத்துவிட்டு அரசியலுக்கு வரட்டும்" என்று அவர் கூறினார்.