காட்டு யானை மிதித்து தொழிலாளி சாவு; இரத்த வெள்ளத்தில் மிதந்ததை பார்த்து மக்கள் அச்சம்...
நீலகிரி
நீலகிரியில் காட்டு யானை மிதித்து தொழிலாளி ஒருவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி செம்மனாரை ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த தாசன் என்பவரது மகன் மகாலிங்கம் (43). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று மதியம் மகாலிங்கம் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மாலை 5 மணியளவில் வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை வெளியே வந்துள்ளது.
யானையை பார்த்ததும் மகாலிங்கம் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை மகாலிங்கத்தை துதிக்கையால் தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்து மயங்கினார்.
இதனையடுத்து யானை மகாலிங்கத்தை மிதித்தில் அவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகாலிங்கத்தின் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது அங்கு யானை பிளிறியபடி நின்றது. மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து யானையை விரட்டியடித்தனர்.
பின்னர், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனக்காப்பாளர் முருகன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் மகாலிங்கத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யானை தாக்கி தொழிலாளி இறந்ததால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.