தனியார் பள்ளிகளுக்கு தரவேண்டிய ரூ.200 கோடியை உடனே வழங்க வேண்டி தமிழக அரசுக்கு வலியுறுத்தல்...
திருவாரூர்
அனைவருக்கும் இலவச கல்விச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.200 கோடியை உடனடியாக தமிழக அரசு தர வேண்டும் என்று நர்சரி, பிரைமரி மெட்ரிக் பள்ளி சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிச் சங்கத்தின் சார்பில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று திருவாரூர் கஸ்தூரிபா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மெட்ரிக் பள்ளி இயக்குனர் கண்ணப்பன் பங்கேற்று பள்ளிகளை நடத்துவது மற்றும் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது குறித்து கருத்துகளை வழங்கினார்.
பின்னர், திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், "கடந்த 2016 - 17-ஆம் ஆண்டில் அனைவருக்கும் இலவச கல்விச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.200 கோடியை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும்.
நகர மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழைய பள்ளி கட்டிடங்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்.
பத்து ஆண்டுகளாக அங்கீகாரமுள்ள பள்ளிகளுக்கு நிரந்தர அங்கிகாரம் வழங்க வேண்டும்,
புதிய பாடத் திட்டத்திற்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதேபோன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.