சொன்னதை செய்து காட்டிய நடிகர் சத்யராஜ் - முதல்வருக்கு கோரிக்கை...!
பேரறிவாளன் மற்றும் அவரது தந்தையின் உடல் நலம் விசாரித்த நடிகர் சத்யராஜ் பேரறிவாளனின் தந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜீவ்காந்த் கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். 26 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு கடந்த மாதம் 25 ஆம் தேதி தான் பரோலில் வெளியுலகத்தை பார்த்தார்.
பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்து கொள்ள பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகே இந்த பரோல் கிடைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு மாதமும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது, வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது, போலீசாரிடம் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
அப்போது பேரறிவாளனின் பரோல் செய்தியறிந்து பிஜுவில் படபிடிப்பில் இருந்த நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்று வெளியிட்டார்.
அதில், இன்று எனது வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான நாள் எனவும், பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலையானால் இன்னும் சந்தோஷமாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், கைதாகி சிறையில் உள்ள 7 பேரும் விடுதலையாக வேண்டும் எனவும், பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்வதற்குள் தான் படப்பிடிப்பு முடிந்து தமிழகம் வந்துவிட்டால் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி தற்போது படபிடிப்பு முடிந்து தமிழகம் வந்த நடிகர் சத்யராஜ் பேரறிவாளனையும் அவரது தந்தையையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சத்யராஜ், பேரறிவாளன் தந்தையின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவரின் பரோல் நாட்களை அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தார்.