நாமக்கல்,
திருச்செங்கோடு பகுதியில் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்று ஆட்சியர் ஆசியா மரியம் மேலாய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு குறித்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று, வருவாய்த்துறை அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு சரியான விவரங்களை பதிவுச் செய்து வருகின்றனரா? என்றும் பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்றும் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு மேலாய்வு செய்தார்.
திருச்செங்கோடு தாலுகா மாணிக்கம்பாளையம், மானத்தி, கூத்தம்பூண்டி, 67–வது கௌண்டம்பாளையம், மண்டகப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வருவாய்த் துறையினர் மேற்கொண்டு வரும் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு சரிபார்ப்பு பணிகளை ஆட்சியர் மேலாய்வு செய்தார்.
மானத்தி கிராமத்தில் சதாசிவம், தர்மசிவம் ஆகியோர் சாகுபடி செய்திருந்த சோளப்பயிர்கள் முற்றிலும் காய்ந்து விட்டது.
இதேபோல் முத்தம்மாள் மற்றும் சரஸ்வதி ஆகியோர் சாகுபடி செய்திருந்த நிலக்கடலை செடிகள் முற்றிலும் காய்ந்து விட்டது.
கூத்தம்பூண்டியில் அசோகன் என்பவர் சாகுபடி செய்திருந்த துவரை மற்றும் ஊடுபயிராக சாகுபடி செய்திருந்த கொள்ளு ஆகிய பயிர்கள் வறட்சியால் காய்ந்து விட்டன.
இதை வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு விவரங்களை பதிவு செய்தனர்.
இந்த பணியை ஆட்சியர் பார்வையிட்டு மேலாய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திருச்செங்கோடு தாசில்தார் தமிழ்மணி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை சார்ந்த பணியாளர்கள் உடன் இருந்தனர்.
