The struggle with asking for drinking water lying on the road Happening even in the form of struggle update
கரூர்
கரூரில், ஒரு வாரத்திற்கும் மேலாக சீராக குடிநீர் விநியோகிக்கப்படாததால் சினம் கொண்ட மக்கள் வெற்றுக் குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலையில் படுத்துக் கொண்டு மறியல் போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம் வாங்கல்குப்புச்சிப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த காமாட்சியம்மன் கோவில் தெரு, ஈ.வே.ரா.தெரு, வள்ளுவர் தெரு ஆகிய பகுதிகளில் வசித்து வரும் குடும்பத்தினர் அனைவருக்கும் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் மனுவும் அளித்துள்ளனர். ஆனால் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் சினம் கொண்ட அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலை கரூர் - மோகனூர் சாலையில் வெற்றுக் குடங்களுடன் சாலையில் உட்கார்ந்தும், படுத்துக் கொண்டும் மறியல் போராட்டம் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வாங்கல் காவல் ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் சாந்தி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மறியல் போராட்டத்தில் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது காவலாளர்கள், “இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட மக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் கரூர் - மோகனூர் சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
