“காதலிக்க மறுத்த பள்ளி மாணவி” பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கொடூர இளைஞன்!
காதலிக்க மறுத்த பள்ளி மாணவி மீது இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் மதுரை முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுவாக்கோட்டையைச் சேர்ந்த மணிபாண்டி, பேச்சியம்மாள் என்ற தம்பதிக்கு 14 வயதான சித்ராதேவி என்ற மகள் உள்ளார். இவர் திரளியை அடுத்த அச்சம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் தன்னை காதலிக்கும்படியும், நிஐமானம் செய்துகொள்ளவும் மாணவியை அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார்.
பாலமுருகன் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் விஷயத்தை பெற்றோரிடம் சித்ராதேவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சித்ரதேவியின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து வெளியில் வந்த பாலமுருகன் காதலர் தினத்தன்று தனது காதலை ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாதா? என இறுதியாக கேட்டுள்ளார். அப்போதும் மாணவி மறுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பாலமுருகன் நேற்று மாலை மாணவி பள்ளி முடித்து பேருந்துக்காக காத்திருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அவர் மாணவியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதைக்கண்டு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் மாணவியை திருமங்கலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து பாலமுருகனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அச்சம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் மறைந்திருந்த பாலமுருகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.