சென்னையில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம்… துப்பாக்கி முனையில் 1 லட்சம் கொள்ளை…
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் பணியாளர்களை துப்பாக்கி முனையில் கட்டிப் போட்டு ரூ1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
சென்னையில் திருவான்மியூர் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டருக்குள் நுழைந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் ஊழியரைக் கட்டிப் போட்டுள்ளனர்.
பின்னர் சாவகாசமாக அங்கிருந்த ரூ1 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர். தலைநகர் சென்னையில் புறநகர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் நடந்த இக்கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். எழும்பூர் ரெயில்வே டிஎஸ் பி ஸ்ரீகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து திருவான்மியூர் ரெயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் துப்பாக்கி பயன்படுத்தி குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது.மீண்டும் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்குகிறதா ? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.