மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியதில் இருந்து 4 ஆண்டுகளில் நிறைவு பெற்று மெட்ரோ ரயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மெட்ரோ ரயில் இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார்.
பயணிகளை கவர்ந்த மெட்ரோ ரயில்
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் பொதுமக்களிடம் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்த மக்களுக்கு மின்சார ரயிலுக்கு அடுத்த படியாக மெட்ரோ ரயில் கை கொடுத்துள்ளது. இதனால் குறித்த நேரத்தில் பணிக்கு செல்லவும் பணி முடித்து வீடு திரும்பவும் பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இந்தநிலையில் சென்னையை அடுத்து மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

மதுரையில் மெட்ரோ ரயில்
இதன் முதல் கட்டமாக மதுரையில் எந்த, எந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது என்பது குறித்து கள ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட மேலாண்மை இயக்குனர் சித்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை ஜீலை 15 ஆம் தேதி தமிழக முதலமைச்சரிடம் அளிக்கப்படும் என கூறினார்.

4 ஆண்டுகளில் மெட்ரோ ரயில்
மதுரையில் 32 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்தில் 27 ரயில் நிலையங்கள் இடம்பெறும் என கூறினார். மெட்ரோ ரயில் திட்ட பணியால் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர். சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார். மதுரை மெட்ரோ ரயில் பாதைகளுக்கும், உயர்மட்ட மேம்பால பாதைக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை எனவும் கூறினார். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கியதில் இருந்து 4 ஆண்டுகளில் நிறைவு பெற்று மெட்ரோ ரயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சித்திக் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
Chennai News: சென்னையில் சிக்னல் கொடுத்தும் நிற்காமல் சென்ற ரயில்; பயணிகள் ஆவேசம்
