திருமானூர்,

ஜல்லிக்கட்டு நடத்தி தமிழகத்தின் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அகில இந்திய விவசாய சங்கத்தின் ஒன்றியக்குழு கூட்டம், அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழப்பழுவூரில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் மணியன் தலைமைத் தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேவதாஸ், தங்கமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் வரப்பிரசாதம் வரவேற்றார்.

இந்தக் கூட்டத்தில், “அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்து வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்”,

“கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்”,

“கரும்பு டன் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரமும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்க வேண்டும்”,

“ஜல்லிக்கட்டு நடத்தி தமிழகத்தின் பாரம்பரியத்தை காத்திட வேண்டும்”,

“இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை வழங்கிட வேண்டும்”,

“ஏரி, குளங்களை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை காத்திட வேண்டும்” போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் பிச்சைப்பிள்ளை, கரும்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் புனிதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் செல்லத்துரை, சங்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி மற்றும் மக்களுக்காக சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் போராட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.