நிர்மலா தேவி வீட்டுக்கு சென்ற போலீசார்! வீடு உட்பக்கமாக பூட்டியிருப்பதால் விசாரணை நடத்துவதில் தாமதம்...! ஒன்றரை மணி நேரமாக காத்திருக்கும் போலீசார்!
கல்லூரி மாணவிகள், உயர் அதிகாரிகளிடம் 'அட்ஜெட்ஸ்' செய்து கொள்ளும்படி நிர்பந்தித்த பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டில் போலீசார் விசாரணை நடத்த சென்றுள்ளனர். வீடு உட்பக்கமாக பூட்டியிருப்பதால் போலீசார் விசாரணை நடத்த முடியாமல் வாசலில் காத்துக் கொண்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, 4 மாணவிகளிடம் உயர் பொறுப்பில் உள்ளவர்களுடன் அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், பணமும் தருவதாக கூறி நிர்பந்தப்படுத்தினார்.
ஆனால், மாணவிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டனர். நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசும் ஆடியோ வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது. ஆடியோவில் பேசியது நான் தான் என்றும், தான் பேசியதை
மாணவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியை நிர்மலா தேவி கூறினார். மாணவிகளை தவறான வழியில் கொண்டு செல்லும் வகையில் பேசிய பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இந்த நிலையில், நிர்மலா தேவி மாணவிகளிடம் பேசியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர் முரளி, தமிழக ஆளுநருக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முரளி கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நிர்மலா தேவி, நிரந்தரமாக பணி நீக்கம்செய்யப்பட வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கல்லூரி வாயிலின் முன்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேவாங்கர் கல்லூரி நிர்வாகம், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. தனபாலிடம், பேராசிரியை நிர்மலா தேவி குறித்து புகார் கொடுத்துள்ளது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் உள்ள நிர்மலா தேவி வீட்டிற்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்த சென்றனர். அப்போது நிர்மலா தேவியின் வீடு உள் பக்கமாக பூட்டி இருந்தது. போலீசார் காலிங் பெல் அடித்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. சுமார் ஒன்றரை மணிநேரமாக நிர்மலா வீட்டு வாயிலில் போலீசார் காத்துக் கொண்டுள்ளனர். இதனால் நிர்மலா தேவியை போலீசார் விசாரிக்க முடியவில்லை.
இதனிடையே தேவாங்கர் கல்லூரியில் தாசில்தார் கார்த்தியாயினி விசாரணை நடத்தி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் விசாரணை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக நிர்மலா தேவி கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.